சனி, 27 ஜூன், 2015

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!

ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்!
வறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், 'இது தப்பு’ என்று தெரிந்தும், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால்? நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய 'தவறுகள்’ என்னென்ன என்பது குறித்து, தமிழகத்தின் பல்வேறு டாக்டர்களிடம் கேட்டோம். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராஜா, பல் மருத்துவர் ரவிவர்மா, புதுச்சேரியைச் சேர்ந்த பொது நல மருத்துவர் நாகராஜன், திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கவிதா, சாத்தூரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அறம் ஆகியோரின் பரிந்துரைப்படி முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
புகைபிடித்தல்  மது அருந்துதல்

சந்தோஷம், சோகம், டென்ஷன்... என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது. புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல; அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.
பல் துலக்காமல் தூங்குதல்
காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விஷயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.
வேகமாக உண்ணுதல்
சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி... பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக 'களி’ போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது. ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, செரிமானம் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.
காலை உணவைத் தவிர்ப்பது
அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் காபி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் செரிமான மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.
உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது. மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.
நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது
மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.
டிவியில் மூழ்குவது
மணிக்கணக்கில் கம்ப்யூட்டர், டிவி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், செரிமான மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும்«பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம். உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.
கலர்ஃபுல் ஜங்க் ஃபுட்
இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய இட்லி, தோசை பிடிப்பது இல்லை. கலர்ஃபுல்லான ஜங்க் ஃபுட்ஸ் அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் மைதா மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், 'நார்ச் சத்து’ கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.  சில ஜங்க் ஃபுட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன. இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களை ஈர்ப்பது உணவிலுள்ள அந்த நிறங்கள்தான் என்பதால், வீட்டிலேயே குழந்தைகளுக்கு, கலர்ஃபுல் 'ஃப்ரூட் சாலட்’ செய்து தரலாம்.
ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை
உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொலஸ்ட்ரால் படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைட்ரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.
டீ, காபி தவிர்க்கலாமே!
டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, காபி அருந்துபவர்களுக்கு அந்தத் 'தூண்டுதல்’ அதிகமாகி மூளையைத் 'தொந்தரவு’ செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். கலோரிகள் அதிகரிக்கும். காபி, தேநீருக்குப் பதில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.
- பா.பிரவீன் குமார், லோ.இந்து

புதன், 24 ஜூன், 2015

மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான யோசனைகள்

மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான யோசனைகள் ஐந்து மட்டும் சொல்லுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டையாவது கடைப்பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறேன்?
 
* தன் நிலை அறிந்து வாழ வேண்டும்.
* வருமானத்துக்கும் செலவுக்குமான விகிதாசாரம் சம அளவில் அமைய வேண்டும்.
* அடுத்தவரோடு ஒப்பிடுதலும் பொறாமைப்படுதலும் கூடாது.
* நா காக்க வேண்டும்.
* மனதறிய பொய்மை கூடாது.
 
இந்த ஐந்துமே சராசரி வாழ்க்கைக்கு அடித்தளமான விஷயங்கள். இந்த ஐந்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கு கஷ்டங்கள் இல்லை. இதனைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் வள்ளுவரும் சித்தர்களும் ஆன்மிகப் பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
‪#‎விகடன்‬

புதன், 18 மார்ச், 2015

ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்?

 ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்?
நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது போன்றது என்பது மிகவும் அவசியம். ஒரு நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் துவங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்துக்குமே இப்படி தான் பேச வேண்டும் என்ற சில விதிகள் உள்ளன.

அதனை நீங்கள் மீறினால் உங்கள் பேச்சு தவறாகவும், சர்ச்சையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதிலும் ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பதை பார்ப்போம்.



1.சில வார்த்தைகளை பேசாதீர்கள்!

ம்...உங்களுக்கு தெரியும்....சரியாக சொல்லபோனால்...இப்படிபட்ட வார்த்தைகளை சிறப்பான கலந்துரையாடல்களில் தலைவர்கள் பேசுவதில்லை. கூற வேண்டிய விஷயத்தை நேரடியாகவும், தெளிவாகவும், சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள். உதாரணமாக நீங்கள் உற்று கவனித்தால் நாட்டின் அதிபர் / பிரதமர்களின் சிறப்பு தின உரைகளில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்கவே முடியாது. உங்களுக்கு தெரியும் போன்ற வார்த்தைகளை  தவிர்ப்பது அவசியம்.

2. தடுமாற்றம் கூடாது!

ஒரு பெரிய பொது நிகழ்ச்சியிலோ அல்லது நிறுவன கலந்தாய்வு கூட்டங்களிலோ பங்கேற்கும் போது உங்களது விளக்கங்கள் தெளிவானதாக இருப்பது அவசியம். ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தில் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கலாம். நீங்கள் தொடர்ச்சியாக பேச முடியாமல் போனால் நீங்கள் பேச வேண்டிய விஷயங்களில் உள்ள சிறப்பம்சங்கள் உங்களது தடுமாற்றத்தால் தவறான புரிதலுக்கு உள்ளாக நேரிடும்.

நீங்கள் பேசும் போது ஏதாவது ஒரு தவறான வார்த்தையை உபயோகித்துவிட்டு மன்னிப்பு கோருவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். பல மணி நேர உரை நிகழ்த்தும் கருத்தரங்கங்களிலும், பட்ஜெட் அறிவிப்புகளின் போது இந்தச் செயலை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் ஒரு போதும் தடுமாற்றம் அடைய மாட்டார்கள்.

3. நான் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்!

உங்களது பேச்சுக்களின் போது நான் என்ற வார்த்தையை ஒரு தலைவனாக இருப்பவர் பயன்படுத்தவே கூடாது. நீங்கள் பயன்படுத்தினால் அது உங்கள் தலைமை பண்பை சோதிப்பதாக அமையும். பெரும்பாலான தலைவர்கள் தங்கள் உரையாடலில் நான் என்ற வார்த்தையை தவிர்த்திருப்பார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பேச்சுகளை கேட்டிருந்தீர்கள் என்றால் அவரது பேச்சில் அணி அவரது ஆட்டத்தால் வெற்றி பெற்றால் கூட நான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார். இதனை ஒரு தலைவராக இருப்பவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.



4.சூழலை புரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் எங்கு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் இருக்கும் மனிதர்களை குறிக்கும் விதமாகவும், அவர்களை சார்ந்த விஷயமாகவும் அது இருந்தால் உங்களது பேச்சை கவனிப்பார்கள்.நீங்கள் பேச்சை துவங்கும் போது சில மேற்கோள்களுடன் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கலாம். அப்படி துவங்கும் போது எந்த பகுதியில் பேசுகிறீர்களோ ஒரு வார்த்தையை அந்த பகுதிக்கான பிராந்திய மொழியில் துவங்குங்கள்.

கொல்கத்தாவில் பேசும் போது பெங்கால் மொழியிலும், தமிழ்நாட்டில் பேசும் போது தமிழிலும் துவங்கினால் உங்கள் மீது ஒரு ஈர்ப்பு கவனிப்பவர்களுக்கு அதிகரிக்கும். குறிப்பாக சமீப காலமாக நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் ஒரு மேற்கோளுடன் பேச்சை துவங்குவதையும், அது அந்த நாட்டையும் இந்தியாவையும் இணைத்து பேசுவதாக இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். இது போன்ற விஷயங்களை ஒரு தலைவர் கடைப்பிடிக்க வேண்டும்.



5. தெளிவான முடிவு வேண்டும்!

உங்கள் பேச்சு ஏதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்து ஏதோ ஒரு விஷயத்தில் முடிவதாய் இருக்க கூடாது. சரியான நோக்கத்தில் ஆரம்பித்து சரியான இலக்கை நோக்கி சென்று தெளிவான முடிவை கூறி முடிப்பதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உங்கள் பேச்சு முழுமையான பேச்சாக இருக்கும். இதனை ஒரு தலைவனாக இருப்பவர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது போன்ற நேரத்தில் உங்களது பேச்சு அனைவருக்கும் புரியும் விதமாகவும், சளிப்பை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

பெரும்பாலான தலைவர்கள் எழுதி வைத்து படிப்பதை பழக்கமாக கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டாதவாறு இயல்பாக படிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். இதுவும் கூட ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதி தான். குறிப்புகள் அவர்களது பேப்பரில் இருந்தாலும் அதனை பேசும் போது இயல்பாக பேசுவது தான் திறமை.

ஒரு தலைவனாக இருப்பவர் இந்த ஐந்து விஷயங்களை முக்கியமாக கவனத்தில் கொண்டால் அவரது பேச்சு சிறப்பானதாக அமையும்.