வெள்ளி, 12 செப்டம்பர், 2014

ஐ.க்யூ....

1. நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்கு வெளியே ராஜு மிகுந்த பதற்றத்துடன் காத்திருக்கிறான். தன் பெயர் அழைக்கப்பட்டவுடன் வேகவேகமாக உள்ளே சென்றவன், மிதியடி தடுக்கி, கையில் இருந்த ஃபைலுடன் நேர்முகத் தேர்வு நடை பெற்ற அறைக்குள் விழுந்துவிட்டான். கடுப்பான அதிகாரிகள், ''ராஜு! வாட் இஸ் திஸ்?'' எனக் கேட்டனர். பதற்றத்துக்கு நடுவே ராஜு சொன்ன பதிலில் அதிகாரிகளின் கோபம் மறைந்து, ''ஓ.கே... ஓ.கே! கம் இன்சைட்!'' எனச் சிரித்துக்கொண்டே கூறினர். அப்படி அவர்கள் சிரிக்கும் அளவுக்கு ராஜு என்ன சொல்லிஇருப்பான்?
2. நேர்முகத் தேர்வில் மோகனிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. 'உங்களது இடப்பக்கமும், வலப் பக்கமும் இரண்டு கிணறுகள் உள்ளன. இடப்பக்கக் கிணறு முழுக்க நீர் நிரம்பி இருக்கிறது. வலப்பக்கக் கிணற்றில் ஒரு சொட்டு நீர்கூட இல்லை. இரண்டு கிணறுகளும் சம அளவு ஆழம் உடையது. உங்களிடம் ஒரு வாளி தரப்படுகிறது. அந்த வாளியைப் பயன்படுத்தி எத்தனை முறைகளில் உங்களால் இடப்பக்கக் கிணற்றில் இருந்து நீரை வலப்பக்கக் கிணற்றுக்கு மாற்ற முடியும்?'' மோகன் அந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்கவில்லை. ஆனாலும், அவனுக்கு வேலை கிடைத்தது. ஏன்?
3. 5+5+5=550. ஒரே ஒரு கோடு போட்டால் இந்த சமன்பாடு உண்மையாகும். அந்தக் கோடு எது?
- ஜி.லட்சுமிபதி, சென்னை-88.
4. ஒரு பொருள். அதில் ஒன்று வாங்கினால் ஐந்து ரூபாய், இரண்டு வாங்கினால் அதே விலைதான். 12 வாங்கினால் பத்து ரூபாய். 144 வாங்கினால் பதினைந்து ரூபாய். அந்தப் பொருள் என்ன?
5. கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கி ஒரு மின்சார ரயில் 90 கி.மீ. வேகத்தில் செல்கிறது. அது வெளியிடும் புகை எந்தத் திசையில் செல்லும்?
6. நான் பொய் சொல்லவே மாட்டேன். என்னிடம் இரண்டு நாணயங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால், சத்தியமாக அதில் ஒன்று 50 பைசா நாணயம் இல்லை. எப்படி?
7. நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர். பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர். பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர். ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார். அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது. அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. எப்படி?

நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்!

நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்!
செ.கார்த்திகேயன்
‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும்.
நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது  அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.   
      
சபரியின் இந்த இக்கட்டான சூழ்நிலை நமக்கும் உருவாகாமல் இருக்கவும், பக்கெட் ஒன்றிலேயே தொடர்ந்து நாம் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்? அப்படி இருந்தால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்கிற கேள்வியுடன் எம்சிஸ் டெக் இந்தியா நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
அறிவைப் பட்டைதீட்டுங்கள்!
“பல்வேறு போராட்டத்துக்குப்  பிறகு வேலையில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தனது அறிவை பட்டைத்தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குப்பின் வேலைக்குச் சேர்ந்தவர்கள்கூட அவர்களது அறிவால் சிறப்பாக செயல்பட்டு, உயர்பதவிக்கு தேர்வாகிவிடுவார்கள். 
அனைத்து விஷயங்களிலும் அப்டேட்டாக செயல்படுகிறவர் தங்களின் வேலையைப் பிழையின்றி விரைவாக செய்துமுடிப்பார்கள். எல்லா விஷயங்களும் அவர்களுக்குத் தெரியும் என்பதால், நிறுவனத்தில் அவர்களுக்குப் புகழும் பெருமையும் கிடைக்கும். சக பணியாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உருவாகும்.  அவர்களிடம் மனஅழுத்தமானது அறவே இருக்காது. அவர்கள் செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். இதனாலேயே பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும்.
அப்டேட் அவசியம்!
அறிவுத் திறனை  எப்படி வளர்த்துக்கொள்வது? எந்தத் துறை சார்ந்து வேலை செய்கிறோமோ, அந்தத் துறையில் உள்ளே நுழையும் புதிது புதிதான விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துவைத்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை எனில், அவ்வப்போது வெளியாகும் புரோகிராம் மொழிகளை (சி ஷார்ப், ஜாவா, டாட்நெட் போன்றவை) நிச்சயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அது தெரிந்து வைத்திருப்பவர்களுக்கே நிறுவனமானது முக்கியத்துவம் கொடுத்து முன்னேற வைக்கும்.
நிறுவனத்தைப் பொறுத்தவரை, பணியாளர் களின் அறிவுத்திறன் மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு நிறுவனத்தின் தரம் என்பது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் அறிவுத்திறனைக் கொண்டே அறியப்படும்” என்றவர், ஒரு பணியாளர் முதல் பக்கெட்டில் தொடர்ந்து இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.
பக்கெட் ஒன்றில் நிலைத்திருக்க..!
தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல், அலுவலகத்தில் சில எக்ஸ்ட்ரா வேலைகளைக் கற்று வைத்திருப்பது அவசியம். நேர்மையான அணுகுமுறையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
மதிப்புக்கூட்டுகிற மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செயல்திறன் வேகமாகவும் அதே சமயத்தில் ஸ்மார்ட்டாகவும் இருக்க வேண்டும்.
தான் செய்யும் வேலை தவிர்த்து எக்ஸ்ட்ரா பொறுப்புகளையும் எடுத்துச் செய்ய வேண்டும்.
 முதல் முக்கியத்துவத்தை தான் செய்யும் வேலைக்கும், அதற்கடுத்த முக்கியத்துவத்தை குடும்ப விஷயங் களுக்கும் கொடுக்க வேண்டும்.

அலுவலகச் சூழல் மனஅழுத்தத்தை உண்டாக்கும்போதும், செய்யும் வேலை யில் கவனச்சிதறல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பணியிடத்தில் குழுவாக இணைந்து செயல்படும் சூழ்நிலை உண்டானால் அனைவரிடத்திலும் இணைந்து பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

திட்டமிடலில் புத்திக்கூர்மையுடன் செயல்படுபவராக இருக்க வேண்டும்.
அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 சாதாரண வேலைகள் மட்டுமின்றி,  தன் துறை சார்ந்த சட்டரீதியான விஷயங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டால் நிறுவனம் நம் மீது வைத்திருக்கும் மதிப்பு உயரும்.
அறிவுத்திறனை மேம்படுத்த...
முதலில், தனக்குத்தானே சுய செயல்திறன் பரிசோதனையை (Performance Self Test) மேற்கொள்வது அவசியம்.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு ‘Cross Functional Training’-ஐ அவ்வப்போது நடத்துவார்கள். இதில் பங்கேற்று தனது திறனை மேம்படுத்திக் கொள்பவர்களை ஒருபோதும் நிறுவனம் இழக்காது. அவர்களுக்குச் சம்பளத்தை அதிகப் படுத்தி இறுதிவரை அதே நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பணியாளர்கள் தங்களின் துறை சார்ந்த விஷயங்களை அடிக்கடி அப்டேட் செய்துகொள்ள வெளி இடங்களில் நடக்கும் வொர்க்‌ஷாப், பயிற்சி முகாம்களின் கலந்துகொள்வது அவசியம்.
தங்களின் வேலையை எளிமையாக்கி கொள்ளத் தேவைப்படும் பயிற்சிக்கான வாய்ப்புகளை நிறுவனத்திடன் சொல்லி ஏற்படுத்திக் கொள்ளலாம். 
இன்றைய இணையதள உலகில் அனைத்துத் துறை சார்ந்த விஷயங்களும் குவிந்து கிடக்கின்றன. அதைப் பயன் படுத்தியும் அவரவர்களின் அறிவுத் திறனை பட்டைத் தீட்டிக் கொள்ளலாம்” என்றார் தெளிவாக.
உங்கள் வேலையை இன்னும்  நன்றாக, புத்திசாலித்தனமாக, பிழை யின்றி செய்தால், முதல் பக்கெட்டில் என்றென்றும் நிலைத்து நிற்கலாம்!

வியாழன், 11 செப்டம்பர், 2014

எவ்வாறு கைகழுவ வேண்டும்

* காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க

வேண்டும்.

* மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.

* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

* வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க

வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

* கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு

எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கோபப்படாதீர்கள்..

யாராவது உங்களை குறை சொன்னால் கோபப்படாதீர்கள்..
அதனை கூர்ந்து கவனியுங்கள்..
நீங்கள் உங்களுக்காக சிந்திக்கவேண்டியதை அவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள்..
உங்கள் நேரத்தை மிச்ச படுத்தியிருக்கிறார்கள்..
தங்களை பற்றி சிந்திக்காமல் உங்களை சிந்திக்கும் மனிதர்கள் மீது கோபம் எதற்கு...?

வியாழன், 4 செப்டம்பர், 2014

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.
உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது; சிரமமில்லாதது; எல்லோருக்கும் ஏற்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும். வேறு எந்த உடற்பயிற்சியைச் செய்ய முடிவெடுத்தாலும், அதற்கெனப் பிரத்யேகக் கருவிகளும் பயிற்சியாளரும் பயிற்சி மையங்களும் தேவைப்படும். செலவும் ஆகும். ஆனால், நடைப்பயிற்சிக்கு இவை எதுவும் தேவையில்லை. பணச் செலவும் இல்லை. இதனால்தான் நடைப்பயிற்சியை ‘உடற்பயிற்சிகளின் அரசன்’ என்கிறோம்.
1. நீரிழிவு நோய் கட்டுப்படும்
உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரம் புதுடெல்லி என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் வருடந்தோறும் நீரிழிவு நோயாளிகள் கூடிக்கொண்டே போகிறார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது. நீரிழிவு நோயாளிகளுடைய தசைகளில் சோம்பலுடன் சுருண்டு கிடக்கும் மெல்லிய ரத்தக் குழாய்கள், நடைப்பயிற்சியின்போது பல கிலோ மீட்டர் அளவுக்கு விரிந்து கொடுக்கின்றன;
புதிய ரத்தக் குழாய்கள் ஏராளமாகத் தோன்றுகின்றன. இதனால், தசைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையைப் பயன்படுத்த இப்போது அதிக இடம் கிடைக்கிறது. இதன் மூலம் ரத்தச் சர்க்கரை குறைகிறது.
அடுத்து, டைப் டூ சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் தேவையான அளவுக்குச் சுரக்காது. அப்படியே சுரந்தாலும், அது முழுவதுமாக வேலை செய்யாது. இன்சுலினை ஏற்று சர்க்கரையைப் பயன்படுத்திச் சக்தி தருவதற்கு, இவர்கள் உடலில் ‘இன்சுலின் ஏற்பான்கள்’ (Insulin receptors) தயாரில்லை. அதே வேளையில், ‘இன்சுலின் ஏற்பான்கள்’ முழு ஒத்துழைப்பு கொடுத்தால், இந்த நிலைமையைச் சரி செய்துவிடலாம். இதற்கு நடைப்பயிற்சிதான் உதவ முடியும்.
எப்படி என்றால், தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது, உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் ஏற்பான்கள் தூண்டப்படுவதால், மீண்டும் அவை புத்துயிர் பெற்றுச் செயல்படத் தொடங்குகின்றன. இதனால், இதுவரை பயன்படாமல் இருந்த இன்சுலின், இந்த ஏற்பான்களுடன் இணைந்து, ரத்தச் சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
2. மாரடைப்பு தடுக்கப்படும்
நாற்பது வயதைக் கடந்த பெரும்பாலோருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ரத்தக் கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகம். இவர்கள் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம். நடைப்பயிற்சி ரத்தக் குழாய்களின் மீள்திறனை அதிகப்படுத்துவதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.
வேகமாக நடக்கும்போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால், இதயத் திசுக்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; மேலும் நடைப்பயிற்சியானது இதயத்துக்குத் தீமை செய்கின்ற எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்துக்கு நன்மை செய்கின்ற ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. இதனால், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை தாக்கும் விகிதம் குறையும்.
3. உடல் பருமன் குறையும்
ஒரு மணி நேரம் வேகமாக நடக்கும்போது உடலில் 300 கலோரி வரை சக்தி செலவாகிறது. இந்தச் சக்தியைத் தருவது கொழுப்பு. இதன் பலனாக, உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது; ரத்த கொலஸ்ட்ரால், உடல்பருமன் ஆகிய பாதிப்புகளும் குறைகின்றன.
4. சுவாச நோய்கள் குறையும்
நடைப்பயிற்சி என்பது காற்றை உள்வாங்கிக் கொள்ளும் ‘ஏரோபிக் பயிற்சி’ என்பதால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் பெற்று, சுவாச மண்டலமும் இதய ரத்தநாள மண்டலமும், அதை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் இதய இயக்கம் வலிமை பெறுகிறது. நுரையீரலின் சுவாசத் திறன் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாச நோய்கள் கட்டுப்படுகின்றன.
5. மன அழுத்தம் மறையும்
தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு ‘எண்டார்பின்’ எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு வழி வகுக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பதற்கு இது உதவும்.
6. முழங்கால் வலி தடுக்கப்படும்
வழக்கமாக 40 வயது ஆகிவிட்டாலே முழங்கால் வலி தொடங்கிவிடும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம்தான் இதற்குக் காரணம், 20 வயதிலிருந்தே நடைப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது அல்லது தள்ளிப்போகிறது. இதற்குக் காரணம், நடைப்பயிற்சியானது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. எலும்புகளையும் தசை நாண்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது.
நடைப்பயிற்சியால் எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலுவடைகின்றன. முழங்கால் மூட்டுகள் உடல் எடையைத் தாங்குவதற்குச் சிரமப்படும்போதெல்லாம், அந்த எடையைக் கால் தசைகள் தாங்கிக் கொள்கின்றன. இதன் பலனாக, முழங்கால் வலி வருவது தடுக்கப்படுகிறது. மேலும் இது முதுமையில் வருகின்ற ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புச் சிதைவு நோயைத் தடுக்கிறது.
இவை தவிர, உணவு நன்றாகச் செரிமானம் ஆகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நன்றாக உறங்க முடிகிறது. நாள் முழுவதும் புத்துணர்வுடன் செயல்பட முடிகிறது. தன்னம்பிக்கை பெருகுகிறது. ஆக்கப்பூர்வ மனப்பான்மை வளர்கிறது.
7. இரண்டாவது இதயம்!
தினமும் முறையாக நடைப்பயிற்சி செய்கிறவர்களுக்குக் கால் தசைகள் இரண்டாவது இதயம் போல் செயல்படுகின்றன. வேகமாக நடக்கும்போது, கால்களில் ரத்தக்குழாய்களுக்குப் பக்கத்தில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு, இதயம் செயல்படுவதுபோல் வலுவான அழுத்தத்துடன் ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகின்றன. எல்லா உடல் உறுப்புகளும் சீராகப் பணி செய்து ஆரோக்கியம் காக்கின்றன. ஆகவே, நடைப்பயிற்சி செய்பவர்கள் இரண்டு இதயங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவதால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
எப்படி நடக்க வேண்டும்?
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், அதிகபட்சமாக 1 மணி நேரம் நடக்க வேண்டும். நடக்கின்ற தூரம்தான் அளவு என்றால், தினமும் 3-லிருந்து 5 கி.மீ. தூரம் வரை நடக்க வேண்டும். தினமும் நடக்க முடியாதவர்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடங்கள் நடந்தாலும் நன்மைதான்.
கை கால்களை வீசி, விரல்களை விரித்து, முழங்கையை மடக்கி நீட்டிப் பயிற்சி செய்துகொண்டே நடக்கலாம். இதற்கு ‘டைனமிக் வாக்கிங்’ என்று பெயர். ‘பிரிஸ்க் வாக்கிங்’ என்று சொல்லக்கூடிய கை, கால்களுக்கு வேகம் கொடுத்து நடக்கும் பாணியையும் பின்பற்றலாம். இளைஞர்கள்/இளம்பெண்கள் ஜாகிங் செல்லலாம்.
முக்கியமான விஷயம், சாப்பிட்டதும் நடக்கக் கூடாது; உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நெஞ்சு வலி இருப்பவர்கள், அடிக்கடி மயக்கம் வருபவர்கள், முழங்கால் மூட்டு வலி, குதிகால் வலி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுத்தான் நடக்க வேண்டும்.
உஷார்! நடப்பதை நிறுத்துங்கள்!
வழக்கமாக நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்கச் சிரமம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சு அடைப்பது, நெஞ்சுவலி, தாடையில் வலி, தோள்பட்டை வலி, இதயப் படபடப்பு, வழக்கத்துக்கு மாறாக அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனே நடப்பதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான், மீண்டும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
நலம் தரும் நடை எது?
# நடைப்பயிற்சி எளிமையான பயிற்சிதான் என்றாலும், இதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால்தான் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். அவை:
# ஒருவர் தனியாகவும் நடக்கலாம். துணைக்கு யாரையாவது சேர்த்துக்கொண்டும் நடக்கலாம். குழுவாகவும் நடக்கலாம்.
# நடைப்பயிற்சி என்றாலே, மூச்சிரைக்க நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். அது தேவையில்லை. இரண்டு பேர் பேசிக்கொண்டே நடந்துசெல்லும்போது, ஒருவர் பேசுவது அடுத்தவருக்குத் தெளிவாகப் புரிய வேண்டும். அந்த வேகம் போதும்.
# தூய காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில்/பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது.
# அதிகாலை ஐந்து மணி முதல் ஏழரை மணி வரை அல்லது மாலை ஐந்து மணி முதல் ஆறரை மணி வரை நடைப்பயிற்சிக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் சுற்றுச்சூழலில் மாசு குறைவாக இருக்கும் என்பதுதான் இதற்குக் காரணம்.
# வெறுங்காலில் நடக்க வேண்டாம். சரியான அளவுள்ள, மென்மையான ஷூவையும் வியர்வையை உறிஞ்சும் பருத்தித் துணியாலான காலுறைகளையும் அணிந்து நடக்க வேண்டும்.
# நீரிழிவு நோயுள்ளவர்கள் எம்.சி.ஆர். செருப்புகள்/எம்.சி.பி. ஷூக்களை அணிந்து கொண்டு நடக்க வேண்டும். இவர்கள் வெறும் வயிற்றில் நடப்பதைவிட 200 மி.லி. பால் அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பழச்சாறு சாப்பிட்டுவிட்டு நடப்பது நல்லது.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com